முள்ளிவாய்க்கால் ஆறாவடுக்களை சுமந்த இரண்டாவது நாள் பேரணி!
இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட இன அழிப்பின் மிக முக்கிய தடமாகவுள்ள முள்ளிவாய்க்கால் மண்ணில் 13 ஆவது நினைவு ஆண்டை முன்னிட்டு பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையில் முன்னெடுக்கப்படும் பேரணியின் இரண்டாவது நாள் இன்று மட்டக்களப்பிலிருந்து ஆரம்பமானது.
இன அழிப்புக்கு நீதியைப்பெற்றுக்கொடு என்னும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் இந்த பேரணியானது நேற்று காலை பொத்து பிரதே சபைக்கு முன்னால் ஆரம்பமாகி மாலை மட்டக்களப்பினை சென்றடைந்தது.
இந்நிலையில், இன்று காலை திருகோணமலை நோக்கி பேரணி செல்கின்றது. இன்று காலை கல்லடி பாலத்திற்கு அருகில் முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் வடுக்களை வெளிப்படுத்தும் நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படும் உப்பற்ற கஞ்சி வழங்கப்பட்டு கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதை தொடர்ந்து பேரணி திருகோணமலை நோக்கி பயணமானது.
வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இந்த பேரணியில் இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபவன்,தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள், மதத்தலைவர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
பேரணி மட்டக்களப்பு நகர் ஊடாக திருகோணமலை வீதியை சென்றடைந்து திருகோணமலை நோக்கி சென்றது.
நாளை திருகோணமலையிலிருந்து முல்லைதீவு சென்று நாளை மறுதினம் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை பேரணி சென்றடைந்து அங்கு இன அழிப்பு வார நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.