இலங்கையில் வசிக்கும் மற்றும் தங்கியிருப்போர் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
இலங்கையில் ஒருவர் வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் அதிகபட்ச தொகையை இலங்கை மத்திய வங்கி வரையறை செய்துள்ளது.
அதனடிப்படையில், முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த 15,000 அமெரிக்க டொலர்கள் என்ற தொகை, தற்போது 10,000 அமெரிக்க டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வர்த்தமானி அறிவிப்பு ஒன்று கடந்த 16 ஆம் திகதி வெளியிடப்பட்டது. இந்நிலையில், இலங்கை மத்திய வங்கி, அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
நடவடிக்கைக்கு தயாராகும் மத்திய வங்கி
பொதுமன்னிப்புக் காலத்தின் இறுதியில், மேலதிக வெளிநாட்டு நாணயத்தை உடமையில் வைத்திருக்கின்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தாம் உரிமையைக் கொண்டிருப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதனடிப்படையில், இலங்கையில் தங்கியுள்ள அல்லது வசிக்கின்ற நபரொருவர் அவரது உடமையில் வைத்திருக்கும் வெளிநாட்டு நாணயத் தொகையை 15,000 அமெரிக்க டொலரிலிருந்து 10,000 அமெரிக்க டொலர் அல்லது அதற்கு சமனான வேறு வெளிநாட்டு நாணயங்களில் அதற்குச் சமனான தொகைக்குக் குறைத்தல்.
பொதுமன்னிப்பு கால எல்லை
குறித்த தொகைக்கு மேலதிகமான வெளிநாட்டு நாணயத்தை உடமையில் வைத்திருக்கின்ற, இலங்கையில் தங்கியுள்ள அல்லது வதிகின்ற நபர்களுக்கு கடந்த 16ஆம் திகதி முதல் செயற்படத்தக்கவாறு 14 வேலை நாட்களைக்கொண்ட பொதுமன்னிப்புக் காலம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியின் இறுதியில் மேலதிக வெளிநாட்டு நாணயத்தை உடமையில் வைத்திருக்கின்ற ஆட்களுக்கு எதிராக நடவடிக்கைகளைத் எடுப்பதற்கு இலங்கை மத்திய வங்கி உரிமையைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

