தோட்ட முகாமையாளர் மீதுள்ள அச்சம் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு!
பள்ளகெவடுவ இந்தகல தோட்டத்தில் ஆறாம் நம்பர் பிரிவில் விறகு சேகரிக்க சென்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை 9.30 அளவில் பள்ளகெவடுவ இந்தகல தோட்டத்தில் விறகு சேகரிக்க சென்ற போதே உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த நபர் 60 வயது துரைசாமி செல்லதுரை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர் ஆகியோர் குறித்த தோட்டப் பகுதிக்கு களவிஜயம் மேற்கொண்டிருந்தனர்.
மலையிலிருந்து வீழ்ந்து உயிரிழப்பு
விறகு சேகரிக்க சென்ற நபர் அவர்களை அவதானித்ததையடுத்து அச்சம் காரணமாக அங்கிருந்து அகன்று விரைவாக வீடு திரும்பும் சந்தர்ப்பத்தில் தேயிலை மலையிலிருந்து தவறி விழுந்தே உயிரிழந்துள்ளார்.
இதனை அந்த பகுதியில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் அவதானித்துள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பில் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுக்குமாறு பண்டாரவளை நீதிமன்ற நீதவான் பணிப்புரை விடுத்துள்ளார்.
அதனையடுத்து இந்த உயிரிழப்புக்கான காரணம் குறித்து பள்ளகெவடுவ காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.