பிள்ளையார் ஆலயத்தை அபகரித்த தனி நபர்- கடையடைப்புப் போராட்டத்தில் மக்கள்!
தலவாக்கலையில் கடந்த சில வாரங்களாக பேசு பொருளாக மாறியுள்ள தலவாக்கலை லோகி தோட்ட மல்லிகைபூ சந்தியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற வழிப்பிள்ளையார் ஆலயத்தினை தலவாக்கலை கதிரேசன் தேவஸ்த்தான பரிபாலன சபையிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரி கவனயீர்ப்பு ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று தலவாக்கலை நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் ஆலயத்தின் ஆலய பரிபாலன சபையினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த போராட்டத்தின் போது பதாதைகளை ஏந்தி, கைகளில் கறுப்பு பட்டிகளை அணிந்து தமது எதிர்ப்பினை போராட்டகாரர்கள் வெளிப்படுத்தினர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சுமார் 200 வருடங்கள் பழமை வாய்ந்த ஆலயத்தில் இருந்த 150 வருடத்திற்கு மேல் பழமை வாய்ந்த ஆலமர கிளைகள் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆசிரியர் மீது விழுந்து அவர் மரணம் அடைந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அதிகாரிகளை அழைத்து விசாரணைகளை நடத்தி தீர்வுகள் பெற்றுக்கொடுக்க வேண்டும் என தெரிவித்திருந்த போதிலும் அது குறித்து எந்த நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் தனி நபர் ஒருவர் மீண்டும் ஆலயத்தினை அபகரித்து விடுதி ஒன்றினுள் அடைக்க முற்படுவதகவும் இதனால் இப்பிரதேசத்தில் உள்ள மிகவும் பழமைமைவாய்ந்த ஆலயம் அழியக்கூடிய அபாயம் காணப்படுவதனாலும், ஆலமரத்தின் கிளைகள் தொடர்ந்து முறிந்து வீழ்வதனால் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், மரணித்த ஆசிரியர் குடும்பத்திற்கு இதுவரை எவ்வித நிவாரண உதவிகளும் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுமே குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து அரச தலைவர் ,பிரதமர் மற்றும் மலையக அரசியல் தலைவர்களுக்கு மகஜர் ஒன்றும் கையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறித்த ஆர்ப்பாட்டத்தில் மதகுருமார்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.















