மீள முடியாத வங்குரோத்து நிலையை நோக்கி நாடு- எதிரணி ஆதங்கம்!
பொதுத் தேர்தலை நடத்த வேண்டுமாயின் அரச தலைவர், 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமே நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அப்படியன்றி அதற்கு முன்னர் கலைப்பது என்றால், முழு நாடாளுமன்றமும் விரும்பி அதனை கலைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. அவ்வாறு இல்லையெனில் 2025 ஆம் ஆண்டு நாடாளுமன்றம் தானாவே கலையும். தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை தேர்தல் ஒன்றினால் தீர்க்க முடியுமா? எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கேள்வியெழுப்பியுள்ளார்.
கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரிய பௌத்த பீடங்களின் மாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
நாடு மிக வேகமாக வங்குரோத்து நிலைமையை நோக்கி பயணித்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நாடு இவ்வாறு நிதி ரீதியாக வங்குரோத்து அடைந்தால், பல தசாப்தங்களுக்கு நாடு அதில் இருந்து மீள முடியாது போகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதில் இருந்து தப்பித்து நாட்டை முன்நோக்கி கொண்டு செல்வதற்காக எதிர்வரும் ஜனவரி மாதம் தான் பொது வேலைத்திட்டம் ஒன்றை முன்வைக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அரச தலைவரிடம் இருக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்தி தீர்க்க முடியுமா அல்லது வேறு விதமாக தீர்க்க முடியுமா என்பது குறித்து மிகவும் புத்திசாலித்தனமாக செயற்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எவ்வாறாயினும் இந்த இடத்தில் மிகப் பெரிய பொறுப்பு நாடாளுமன்றத்திற்கு இருக்கின்றது. அரசியலமைப்புச் சட்டத்தின் 148 ஷரத்திற்கு அமைய நிதி அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிதி தொடர்பான நெருக்கடி. இதனால், கட்சிகள், தலைவர்களுக்கான ஆதரவு என்பவற்றுக்கு அப்பால் சிந்தித்து, செயற்பட வேண்டியது அனைவருக்கும் உள்ள பொறுப்பாகும் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.