இந்தியாவிற்கு இராணுவ சவால்களை ஏற்படுத்த முயற்சிக்கும் சீனா - முற்றுகிறது பனிப்போர்!
சிறிலங்காவின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் கப்பல் நிலை கொள்வது தொடர்பில் இந்தியா மற்றும் சீனா இடையே பெரும் பனிப்போர் ஒன்று மூண்டுள்ளது.
இவ்வாறான நிலையில் இந்தியா இது தொடர்பான அதிருப்தியை வெளிப்படையாகவே தெரிவித்து வருகின்றது.
ஆனாலும் இந்த விடயத்தில் இந்தியாவின் தலையீடு இருப்பதை சீனா விரும்பவில்லை என்பதும் வெளிப்படையான ஒருவிடயமாகவே இருக்கின்றது.
இவ்வாறான நிலையில், சிறிலங்கா அதிபர் பதவியில் இருந்து அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ச, சீனாவின் கப்பலுக்கு வழங்கிய ஒப்புதலை, புதிய அரசாங்கம் திரும்பப் பெறவும், நிறுத்தவும் வாய்ப்பில்லை என்று இலங்கை தேசிய சமாதான சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெஹான் பெரேரா, வொய்ஸ் ஒப் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திர கரையோரத்தில் பலமான இராணுவ நிலைப்பாட்டிற்கு முயலும் சீனா
எனவே சிறிலங்காவிற்கு கப்பலை அனுப்பும் சீனாவின் நடவடிக்கையானது இலங்கையின் இந்து சமுத்திரக் கரையோரப் பகுதியில் பலமான இராணுவ நிலைப்பாட்டை ஏற்படுத்த சீனா முயற்சிக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது என வொஸ்ப் ஒப் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வர்த்தக ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் பயன்படுத்துவதே சீனாவின் இலக்கு என்ற முன்னாள் இலங்கை இராஜதந்திரி தயான் ஜயதிலகவின் கருத்தை வொய்ஸ் ஒப் அமெரிக்கா பதிவிட்டுள்ளது.
அத்துடன் ஜெஹான் பெரேரா, சீனாவிடம் இருந்து எதிர்பார்க்கும் 4 பில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ளவும், சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியை பெற வேண்டுமானால், சீனாவின் கடன்களை செலுத்தும் கால அட்டவணையை மாற்றியமைக்கவும் இலங்கை விருப்பமுடன் இருக்கிறது.
சீனாவின் நோக்கம் இதுவே
எனவே கப்பல் அனுமதியை ரத்து செய்வதன் மூலம் சீனாவின் அதிருப்தியை பெற்றுக்கொள்ள சிறிலங்கா விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சீன திட்டங்கள் மற்றும் கடன்கள் மிகவும் வெளிப்படைத்தன்மையற்றவை மற்றும் அதிக வட்டி வீதத்தைக் கொண்டவை என்று அமெரிக்க அரசாங்கம் கூறுவது சரியானது என்றும் ஜெஹான் பெரேரா வொய்ஸ் ஒப் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி, சீனாவின் நோக்கம் இலங்கைத் துறைமுகத்தை அதன் இராணுவக் கப்பல்கள் எளிதில் அணுகுவதை உறுதி செய்வதே ஆகும். இதற்காக இராணுவத் தளத்தை அமைக்க வேண்டிய அவசியமில்லை என்று சிறிலங்காவிற்கான இந்தியாவின் முன்னாள் துணை உயர் ஸ்தானிகர் கே.பி.ஃபேபியன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவைப் பொறுத்தவரை இது மிகவும் கவலையளிக்கும் ஒரு விசயம். சீனா இந்தியாவிற்கு இராணுவ சவால்களை உருவாக்க முயற்சிக்கிறது என்று ஃபேபியன் கூறியுள்ளதாக வொய்ஸ் ஒப் அமெரிக்கா தெரிவித்துள்ளது.