சீன அமைச்சரின் திடீர் விஜயத்தில் சந்தேகம்!
சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பிங்கின் ஸ்ரீலங்காவுக்கான திடீர் விஜயத்தின் பின்னணியில் உள்ள இரகசியம் குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தின் ஊடாக சீனாவின் கொலணியொன்று ஸ்ரீலங்காவில் உருவாக்கப்பட போவதாக எழுந்துள்ள விமர்சனங்களுக்கு மத்தியில், சீன பாதுகாப்பு அமைச்சரின் இலங்கைக்கான விஜயம் குறித்து நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சரத் பொன்சேகா இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
சாதாரணமாக எமது படையினர் சிரேஸ்ட அதிகாரிகள் வெளிநாடுகளின் அழைப்பின் பேரில் சென்றுவருவது வழக்கமாகும். இந்நிலையில் வெளிநாடுகளிலுள்ள சிரேஷ்ட உறுப்பினர்கள் எமது நாட்டிற்கு விஜயம் செய்வது பிரச்சினையல்ல.
இருப்பினும் கடந்த காலத்தில் அமெரிக்காவின் இராணுவத் தளபதி ஸ்ரீலங்காவுக்கு இதுவரை விஜயம் மேற்கொண்டிருக்கவில்லை. வலய நாடுகளின் இராணுவத் தளபதிகள் விஜயம் செய்திருந்தாலும் பெரும்பாலான நாடுகளின் இரண்டாம், மூன்றாம்நிலை அதிகாரிகளே விஜயம் மேற்கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் சீனப் பாதுகாப்பு அமைச்சரை எடுத்துக்கொண்டால் அவர் எமது நாட்டுடன் பாதுகாப்பு சார்ந்த கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுபவர் அல்ல. எமது நாட்டின் பாதுகாப்புடன் சர்வதேச பாதுகாப்பை ஒப்பிடும்போது நாங்கள் மிகவும் கீழ்நிலையில் தான் உள்ளோம்.
அதனால் மிகவும் அதிகாரமுடைய ஒருவர் திடீரென ஸ்ரீலங்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருப்பது சந்தேகத்தையே ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீலங்காவின் அரச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் வெளிநாடு சென்று சொக்லேட்டுகள் உட்பட பொருட்கொள்வனவில் ஈடுபடுவதுபோல் சீனப் பாதுகாப்பு அமைச்சரது ஸ்ரீலங்கா விஜயத்தை ஒப்பிடக்கூடாது.
அப்படிப்பட்ட ஒருவர் ஸ்ரீலங்காவிற்கு தற்சமயம் விஜயம் மேற்கொண்டிருப்பதன் பின்னணி மிகவும் அவசியமான காரணமாகவே இருக்கலாம்.
அந்த இரகசிய காரணம் என்ன என்பது தான் எம்மிடத்தில் உள்ள கேள்வியாகும் என்றார்.
