முருத்தெட்டுவே ஆனந்த தேரரிடமிருந்து விருதுகளை பெற மறுத்த பல்கலை.மாணவர்கள்!
முருத்தெட்டுவே ஆனந்த தேரரிடம்(Muruththettuwe Ananda Thero) இருந்து பட்டமளிப்புக்கான விருதுகளை பெற மாணவர்கள் மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் இன்று நடைபெற்ற கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழகத்தின் தற்போதைய உப வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரரிடம்(Muruththettuwe Ananda Thero) இருந்து பட்டமளிப்புக்கான விருதுகளை பெறவே மாணவர்கள் மறுத்துள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை, முருத்தெட்டுவே தேரரிடம் இருந்து பட்டமளிப்பு சான்றிதழ்களை பெற்றுக்கொண்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள், அதற்கான விருதுகளை அவரிடம் இருந்து பெற்றுக்கொள்ள மறுத்துள்ளனர்.
முருத்தெட்டுவே ஆனந்த தேரர் உப வேந்தராக நியமிக்கப்பட்டமையானது ஒரு அரசியல் நியமனம் என்ற காரணத்தினால், அதனை பகிரங்கமாக எதிர்க்கும் வகையில் மாணவர்கள் இதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கொழும்பு நாராஹென்பிட்டி அபயராம விகாரையின் விகாரதிபதியான முருத்தெட்டுவே ஆனந்த தேரரை கொழும்பு பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக கோட்டாபய ராஜபக்ச நியமித்தார்.
பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர உதவியதன் காரணமாக அவருக்கு இந்த பதவியை வழங்கியதாக ஜனாதிபதி பகிரங்கமாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், உப வேந்தர் பதவிக்கு முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தகுதியற்றவர் என பல்கலைக்கழகங்களை சேர்ந்த கல்வியாளர்கள் குறிப்பிட்டிருந்தனர்.