அடுத்த ஆண்டு சிறிலங்கா துறைமுகத்திற்குள் பிரவேசிக்கவுள்ள பல பாரிய கப்பல்கள்!
இலங்கைக்கு அடுத்த வருடம் பல சுற்றுலா சொகுசு கப்பல்கள் வரவுள்ளதாக துறைசார் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய தற்போது முதலே இலங்கையை நோக்கி பல சொகுசு கப்பல்கள் விரைந்த வண்ணம் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில், அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் நாட்டிற்கு ஒன்பது கப்பல்கள் வருகை தரவுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
துறைமுகத்தை வந்தடைந்துள்ள பாரிய கப்பல்

அந்தவகையில் சுமார் இரண்டாயிரம் பயணிகளுடன் பாரிய கப்பல் ஒன்று கடந்த செவ்வாய்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்நிலையில் மற்றுமொரு சொகுசு கப்பலான எம்.வி அசமாரா குவெஸ்ட் (MV Azamara Quest) என்ற சொகுசு கப்பலும் டிசம்பர் 5 ஆம் திகதி இலங்கை வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் அறிவித்துள்ளது.
மென் சீப் 5 கப்பலின் வருகைக்குப் பின்னர், எம்.வி அசமாரா குவெஸ்ட் எனும் கப்பல், இந்த ஆண்டு ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் நிறுத்தப்படும் இரண்டாவது பயணக் கப்பலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடையாளப்படுத்தப்பட்டுள்ள சுற்றுலா தலங்கள்

MV Azamara Quest(IMO:9210218) எனும் கப்பல், 2000 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பயணிகள் கப்பல். மேலும் இது மால்டாவின் கொடியின் கீழ் பயணிக்கிறது.
அதன் சுமந்து செல்லும் திறன் 30277 மெட்ரிக் தொன் மற்றும் அதன் தற்போதைய வரைவு 5.9 மீட்டர் எனவும் மொத்த நீளம் 181 மீட்டர் மற்றும் அகலம் 25.46 மீட்டர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மென் சீப் 5 கப்பலில் வருகை தந்த பயணிகள் கொழும்பு, யால தேசிய பூங்கா, உடவலவை வனவிலங்கு பூங்கா மற்றும் பல இடங்களுக்கு சென்றுள்ளனர்.
இதேவேளை பயணிகள் மத்தியில் பிரபலமான இடங்களாக புந்தல தேசிய பூங்கா, ஹம்பாந்தோட்டை தாவரவியல் பூங்கா, காலி மற்றும் கதிர்காமம் என்பன அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.