பாரிய கலவரமாக மாறிய மிரிஹான போராட்டம்- காவல் நிலையம் விரையும் மனித உரிமை ஆணைக்குழுவின் சிறப்புக் குழு!
நுகேகொடை மிரிஹான பெங்கிரிவத்தையிலுள்ள அரச தலைவர் இல்லத்தை நேற்று இரவு முற்றுகையிட்டு மக்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்நிலையில், இதனை கட்டுப்படுத்த காவல்துறை, விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டது. அதேவேளை காவல்துறையினரால் கண்ணீர்ப்புகை வீசப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த கொழும்பு வடக்கு, தெற்கு மற்றும் மத்திய, நுகேகொடை காவல்துறை பிரிவு , களனிய காவல்துறை பிரிவு, கல்கிசை காவல்துறை பிரிவு ஆகிய பகுதிகளில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஊரடங்கு நள்ளிரவு 12.48 மணிக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு இன்று அதிகாலை 5.00 மணிக்கு தளர்த்தப்பட்டது. குறித்த சம்பவத்தில் 54 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மிரிஹான சம்பவம் தொடர்பான நிலைமையை ஆராய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிறப்புக்குழுவொன்றும் மிரிஹான காவல் நிலையத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிரிஹான சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்த வேண்டாம் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.