சிறிலங்காவின் தலைநகரில் நிலைமை மாறலாம்! குவிக்கப்பட்டுள்ள படையினர்
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் எதிர்ப்பு பேரணியொன்று நடத்தப்படவுள்ளது.
இந்த பேரணி நாளை இடம்பெறவுள்ளதால் கொழும்பில் நாளை மற்றும் நாளை மறுதினம் விசேட பாதுகாப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, நாளை மநுதினம் 9ஆம் திகதி கோட்டா கோ கம போராட்டக்காரர்களுடன் இணைந்து எதிர்க்கட்சியினரும் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்திற்கு தயார் நிலை
அத்துடன் நாளையதினம் விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகாமையில் பேரணியை ஆரம்பித்து கோட்டை அரச தலைவர் மாளிகை வரை செல்ல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக அரச தலைவர் செயலகம், டெம்பில் லேன், பிரதமர் இல்லம் மற்றும் காவல்துறை தலைமையகம் ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதிசெய்து பொது ஒழுங்கை முகாமைத்துவம் செய்யுமாறு கட்டளை அதிகாரி விசேட அதிரடிப்படையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குவிக்கப்படவுள்ள அதிரடிப்படை
இதற்காக கடமைகளில் ஈடுபடுவதற்கு பெருமளவிலான விசேட அதிரடிப்படை அதிகாரிகள் தேவைப்படுவதாக கூறப்படுகிறது.
எனவே கொழும்பு பிரதேசத்தில் உள்ள முகாம்கள் மற்றும் நிலையங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் வீட்டிலிருந்து பணிக்கு சமூகமளிக்கும் உத்தியோகத்தர்கள் அனைவரையும் அவசர கதியில் மேற்படி கடமைகளுக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.