முத்தரப்பு கூட்டுப் பயிற்சியில் சிறிலங்கா!
இந்தியா - இலங்கை - மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான முத்தரப்பு கூட்டு கடற்பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொழும்பு பாதுகாப்பு கூட்டுகுழுமத்தின் வழிகாட்டலின் அடிப்படையில் இந்த பயிற்சிகள் அமைவதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
கொழும்பு பாதுகாப்பு கூட்டுக்குழுமத்தின் அவதானத்துடனான இந்த பயிற்சியானது நிலையான செயற்பாட்டு நடைமுறைகளை தழுவியதாகவும் மூன்று கடற்படையினரதும் இயங்குதிறனை மேம்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ்.சுபத்ரா ரோந்து கப்பல் மற்றும் P8ஐ நீண்டதூர கடல் ரோந்து விமானம், இலங்கை கடற்படைக்கு சொந்தமான எஸ்.எல்.என்.எஸ்.சமுதுர ஆகியவை இந்த பயிற்சியில் பங்கேற்றுள்ளன.
அத்துடன் மாலைதீவு தேசிய பாதுகாப்பு படைக்கு சொந்தமான MNDFகடல் மார்க்க வேவு விமானமும் அதில் இணைந்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் தடுப்பு, தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் கடல் மீட்பு நடவடிக்கைகள், வான் மார்க்கமான மீட்பு பணிகள் மற்றும் வினைத்திறன் மிக்க தொடர்பினை ஸ்தாபித்தல் ஆகிய விடயங்களில் களரீதியான ஈடுபாட்டினைப் பெற்றுக்கொள்வதற்கு இந்த பயிற்சிகள் வழிவகுத்துள்ளது.
கொழும்பு பாதுகாப்பு கூட்டுக்குழுமமானது கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்திலான நான்காவது முத்தரப்பு மாநாட்டில் நிறுவப்பட்டதுடன் அதற்கான செயலகம் 2021 மார்ச் கொழும்பில் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.