அரச நிறுவனங்களில் பதிவாகும் கொரோனா தொற்றாளர்கள்- விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் மூன்றாவது தடுப்பூசி ஏற்றிக்கொண்டு தொடர்ந்தும் பணிக்கு சமூகமளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது, பல அரச நிறுவனங்களில் கொவிட் நோயாளிகள் பதிவாகியுள்ள போதிலும், பூஸ்டர் தடுப்பூசி பெற்ற ஊழியர்கள் கொவிட் தொற்றுக்குள்ளாகினாலும் ஒரு வாரத்திற்கு பின்னர் பணிக்கு வர முடியும் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கொவிட் தொற்றிற்கு மத்தியில் அரச ஊழியர்கள் விடுமுறை கோருவதற்கு பதிலாக மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக் கொண்டு பணிக்கு வருமாறு பொது சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே. ரத்னசிறி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொவிட் தொற்று காரணமாக கடந்த இரண்டு வருட காலமாக உரிய முறையில் பணிக்கு அழைக்காத போதிலும் அவர்களுக்காக சம்பளத்தை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
தானும் கொவிட் தொற்றுக்குள்ளதாகி ஒரு வாரத்தில் பணிக்கு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் கர்ப்பிணி தாயார் மற்றும் பால் கொடுக்கும் தாய்மார்கள் உட்பட பல்வேறு துறையினரும் கொவிட் தொற்றிற்கு மத்தியில் விடுமுறை வழங்குமாறு கோரிக்கை விடுத்த போதிலும் அவ்வாறு விடுமுறை வழங்க முடியாது.
அவர்களுக்கு விடுமுறை அவசியம் என்றால் சுகாதார பிரிவுகளின் பரிந்துறைக்கமைய விடுமுறை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
