தலைமறைவாகியுள்ள ஜோன்ஸ்டன்- நீதிமன்று விடுத்துள்ள அதிரடி உத்தரவு!
சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 8.00 மணிக்கு முன்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சரணடையுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த காலக்கெடு நிறைவடையும் வரையில், கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணை உத்தரவை செயற்படுத்த வேண்டாம் என்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கைது செய்ய வேண்டாம்
இந்த ரிட் மனு மீதான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இறுதித் தீர்மானம் வரை ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க வேண்டாம் எனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் நீதவானுக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு முன்பாக இடம்பெற்ற அமைதியின்மை சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சந்தேக நபராக பெயரிடப்பட்டார்.
கோட்டை நீதவான் உத்தரவு
இந்த சம்பவம் தொடர்பில் அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே நேற்று பிடியாணை பிறப்பித்தார்.
அதேவேளை தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் நீதிப்பேராணையை பிறப்பிக்குமாறு கோரி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று ஆராயப்பட்டது.
அதனையடுத்தே அவரை சரணடையுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.