பிரதமர் பதவி தொடர்பில் மைத்திரியின் விசேட தகவல்
பிரதமர் பதவி தொடர்பில் தாம் எந்தவொரு அறிக்கையையும் சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பவில்லை என்று முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை அடுத்து மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
இந்நிலையில் அடுத்த பிரதமர் யார் என்கின்ற கேள்வி நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், நேற்று (11) இடம்பெற்ற சுயாதீன குழுவினரின் கூட்டத்தில் சுயாதீன குழுவினால் பிரதமர் பதவிக்காக மூன்று பேரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
நாடாளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபால டி சில்வா, டலஸ் அழகப்பெரும மற்றும் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்களை முன்மொழிவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்ததாகவும் முன்னர் கூறப்பட்டது.
இந்தநிலையில், நேற்று பிற்பகல் அரச தலைவர் கோட்டாபயவிற்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் மைத்திரிபால சிறிசேன முன்னதாக தெரிவித்திருந்தார். எனினும் அது வழங்கப்படவில்லை என்று தற்போது தகவல் வெளியிட்டுள்ளார்.