சிறிலங்கா அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டே பொருளாதார கொள்கைகளை கடுமையாக விமர்சிக்கும் உறுப்பினர்!
நாட்டுக்கு, மாத இறுதி பெருந்தொகை டொலர் கிடைக்கும் என அரசாங்கத்தின் பிரதானிகள் கூறினாலும் அப்படி எதுவும் நடக்காது என்பது அவர்கள் மாத்திரமல்ல நாங்களும் அறிவோம் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர பிரிதர்ஷன யாப்பாவே இவ்வாறு அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.
கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
இப்படியான விதத்தில் நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல முடியாது எனவும் அரசாங்க அதிகாரிகளும், பிரதானிகளும் நாட்டுக்கு பொய் கூறி வருகின்றனர். பொருளாதாரம் எங்கிருந்து கையாளப்படுகின்றது என்பது எமக்கு புலப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதன் பாரதூரமான தன்மையை எவரும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. பொருளாதார பிரச்சினை என்பது அனைவரும் அமர்ந்து பேசி தீர்க்க வேண்டிய விடயம். உண்மையான நோக்கத்துடன் இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும். ஒழிந்து மறைந்து இதனை தீர்க்க முடியாது.
டொலர் நாட்டிற்குள் வருவதற்கான முறைமை இல்லை என்பதே இதற்கு காரணம். நாம் தனிமைப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் உண்மையை பேசி, உண்மையுடன் கொடுக்கல், வாங்கல் செய்ய வேண்டும்.
இதனால், மக்களுக்கு உண்மையான நிலைமையை கூறுவதன் மூலம் மாத்திரமே நாட்டை முன்நோக்கி இட்டுச் செல்ல முடியும் எனவும் அனுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டுள்ளார்.