இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்- பூஜித் மற்றும் ஹேமசிறி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!
இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காதது சம்பந்தமாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளில் இருந்து அவர்கள் விடுதலையாவதற்கான சந்தர்ப்பங்கள் தென்படுவதாக சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மூன்று நீதிபதிகள் அடங்கிய சிறப்பு மேல் நீதிமன்றத்தில் இவர்களுக்கு எதிராக தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களுக்கு எதிராக தலா 855 குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சிறப்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் நாமல் பலல்ல, ஆதித்திய பட்டபெந்திகே, மொஹமட் இர்ஸடீன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் வழக்கு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இவர்களுக்கு எதிரான குற்றப் பத்திரிகைகள் கடந்த 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கையளிக்கப்பட்டன.
கடந்த ஜனவரி மாதம் வரை முறைப்பாட்டாளர் தரப்பிலான சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. இந்த விசாரணைகள் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி முடிவடைந்தன. குற்றம் சுமத்தப்பட்ட தரப்பின் வாதங்களை பரிசீலனை செய்தே அவர்களை விடுதலை செய்வதா இல்லையா என்பது குறித்து நாளைய தினம் தீர்மானிக்கப்படவுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களம் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் எதனையும் சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்த முடியாது இருப்பதால், ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் விடுதலை செய்யப்படலாம் என சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
