பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நான்கு ஆண்டுகள் தேவை என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளதாக சிறிலங்கா பிரதமர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், முதலாவது வருடமே கடுமையான காலம் என்று நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமரின் ஊடகப்பிரிவு வெளியிட்ட காணொளியிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவித்திருப்பதாவது,
தமக்கென இருந்த ஒரே ஒரு வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதில் அதிகமாக அழிந்துபோன சொத்துக்கள் தமது நுால்கள் என்றும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் போர்த்துகேயர் காலம் மற்றும் ஒல்லாந்து கால நுால்கள் உட்பட்ட 2500 நுால்கள் அதில் இருந்தன. தமது காலத்தின் பின்னர் இந்த நுால்களை நாட்டின் பல இடங்களுக்கும் அன்பளிப்பாக வழங்குவதற்கு தாம் தீர்மானித்திருந்ததாக ரணில் தெரிவித்துள்ளார்.
அதனை விட பழங்காலத்து சித்திரங்கள் இருந்தன. அனைத்தும் முற்றாக எரிந்து விட்டதாகவும், எனினும் தற்போது ஒரேயொரு சித்திரமே தன்னிடம் எஞ்சியுள்ளதாக கூறியுள்ளார்.
இதற்கிடையில் கட்சி தலைவர்களின் கூட்டத்தின்போது, சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்று அமைக்கப்படுமானால், தான் பிரதமர் பதவியில் இருந்து விலகிக்கொள்ள தயார் என்பதை அறிவித்ததாகவும் ரணில் விக்கிரமசிங்க காணொளியில் தெரிவித்துள்ளார்.
