மீண்டெழும் இலங்கை - மத்திய வங்கி வெளியிட்ட தகவல்
இலங்கையின் பொருளாதாரம் அடுத்த வருட இறுதியில் இருந்து மீட்சிப் பாதைக்குள் பிரவேசிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கையின் பொருளாதாரம் இந்த வருடத்தின் முதல் பகுதியில் பல சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டிருந்த போதிலும், வருடத்தின் இரண்டாவது பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைகள் காரணமாக பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான அறிகுறிகள் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பொருளாதார மந்தநிலை

கொரோனா தொற்றினால் ஏற்பட்ட இலங்கையின் பொருளாதார பின்னடைவு 2021 ஆம் ஆண்டின் இறுதியில் மிகவும் மோசமடைந்ததுடன் 2022 ஆம் ஆண்டின் முதலரைப்பகுதியில் பொருளாதார மந்தநிலையை ஏற்படுத்தியதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட உடன்படிக்கையை சிறிலங்கா அரசாங்கம் எட்டியதை அடுத்து கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது.
சர்வதேச நாணய நிதிய உதவி

இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள கடன் வழங்குநர்களிடமிருந்து நிதி உத்தரவாதங்கள் தேவைப்படுவதாகவும் கடன் மறுசீரமைப்பு செயன்முறையை மேம்படுத்த மத்திய வங்கி முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதி திட்டமானது, இலங்கைக்கு மிகவும் தேவையான மற்றும் நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட கட்டமைப்பு மாற்றங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.