சிங்கப்பூரில் தஞ்சமடைந்துள்ள கோட்டாபய தொடர்பில் வெளிப்படுத்தப்பட்ட உண்மை!
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூருக்கு வந்ததாகவும் அவருக்கு குறுகிய கால பயண அனுமதி மட்டுமே வழங்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தலை சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் அதிகார சபை நேற்று வெளியிட்டுள்ளது.
கோட்டாபய சிங்கப்பூரில் தஞ்சமடைந்துள்ளமை தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் பயணிகளுக்கு பொதுவாக 30 நாட்களுக்கு விசா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையர்களுக்கான விசா அனுமதி
எனினும் 30 நாட்களுக்கு மேல் சிங்கப்பூரில் தங்கி இருக்க விரும்புவோர் விசா நீடிப்புக்கான விண்ணப்பத்தை இணையத்தளம் வழியாக மேற்கொள்ள முடியும்.
அவ்வாறான விண்ணப்பங்களை ஆராய்ந்து மேலதிக காலம் தங்கி இருக்க விசா வழங்கப்படும் எனவும் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை சுதந்திரத்திற்கு பின்னரான வரலாற்றில் எதிர்நோக்கியுள்ள மோசமான பொருளாதார நெருக்கடி பல மாதங்களாக நீடித்த நிலையில், மக்கள் எதிர்ப்புகள் ஏற்பட்டதன் காரணமாக கடந்த வாரம் கோட்டாபய சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்றார்.
கோட்டாபயவுக்கு புகலிடம் வழங்கவில்லை
அதனையடுத்து அங்கிருந்து தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையிலேயே கடந்த 14 ஆம் திகதி சிங்கப்பூர் சென்ற கோட்டாபய ராஜபக்சவுக்கு 14 நாட்கள் தங்கியிருப்பதற்கான அனுமதி பாஸ் வழங்கப்பட்டது எனவும் சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதேவேளை கோட்டாபய ராஜபக்ச, சிங்கப்பூரில் புகலிடம் கோரவில்லை எனவும் அவருக்கு அடைக்கலம் எதுவும் வழங்கப்படவில்லை என சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.