எரிபொருள் விநியோகத்தில் இராணுவத்தினரின் தலையீட்டால் குழப்பம்!
யாழ்ப்பாணம் அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் விநியோகத்திற்கு என இராணுவத்தினர் பதிவுகளை மேற்கொண்டமையை அடுத்தே சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காலை முதல் இராணுவத்தினர் மண்ணெண்ணெய் விநியோகத்திற்கு என பதிவுகளை முன்னெடுத்தனர்.
முண்டியடித்த மக்கள்
அதனை கேள்வியுற்று பலர் பதிவுகளை மேற்கொள்ள முண்டியடித்தனர். அதன் போது எரிபொருள் நிரப்பு நிலையத்தினர், விவசாயிகளுக்கு விநியோகிக்கவே மண்ணெண்ணெய் உள்ளது எனவும், ஏனையோருக்கு வழங்க முடியாது எனவும் கூறியுள்ளனர்.
அதனை பொருட்படுத்தாது இராணுவத்தினர் தொடர்ந்தும் பதிவுகளை முன்னெடுத்தனர். அதனை அடுத்து குறித்த விடயம் தொடர்பில், கோப்பாய் பிரதேச செயலரும், புத்தூர் பலநோக்கு கூட்டுறவுச் சங்க பொது முகாமையாருக்கும் அறிவிக்கப்பட்டது.
விவசாயிகளுக்கு மாத்திரமே
அதனை அடுத்து மண்ணெண்ணெய், விவசாயிகளுக்கு மாத்திரமே பகிர்ந்தளிக்க உள்ளோம். ஏனையோருக்கு விநியோகிக்க முடியாது என இராணுவத்தினருக்கு தெரிவித்ததை அடுத்து, இராணுவத்தினர் பதிவு நடவடிக்கைகளை இடை நிறுத்தியுள்ளனர்.