எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கு சென்ற நபர் மாயம் - பதறும் மனைவி!
மலர்ச்சாலையின் வாகனத்திற்கு எரிபொருள் பெற்றுக்கொள்ள வீட்டில் இருந்து சென்ற தனது கணவன் நான்கு நாட்களாக வீட்டுக்கு வரவில்லை எனக் கூறி மனைவி அம்பலாங்கொடை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அம்பலாங்கொடை கஹவே பகுதியில் உள்ள மலர்ச்சாலையின் உரிமையாளரது மனைவியே இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். கணவன் வீடு திரும்பவில்லை என்பதுடன் அவரது கையடக்க தொலைபேசியும் செயலிழந்துள்ளது எனவும் முறைப்பாட்டில் கூறியுள்ளார்.
தொலைபேசி இணைப்பு துண்டிப்பு
குறித்த நபரின் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்திய போதும் தொடர்புக்கொள்ள முடியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
எரிபொருள் இல்லாது மலர்ச்சாலையின் நாளாந்த பணிகளை செய்ய முடியாது என்பதால், எனது கணவர் பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு சென்று எரிபொருள் இல்லை எனக் கூறி வீடு திரும்பி இருந்தார்.
தொலைபேசியில் அழைத்தது யார்?
வீடு திரும்பிய எனது கணவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவர், எரிபொருளை பெற்றுக்கொள்ள வருமாறு கூறினார். இதனையடுத்து கணவர் எரிபொருளை பெற்றுக்கொள்ள சென்றதாகவும் முறைப்பாட்டில் கூறியுள்ளார்.
எரிபொருளை பெற்றுக்கொள்ள சென்ற கணவன் வீடு திரும்பவில்லை என்பதால், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, தொலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்து.
எரிபொருளை பெற்றுக்கொள்ள வருமாறு கூறியது யார்? என்பது இதுவரை தெரியவரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு நாட்களாக மாயம்
அவர் வீட்டை விட்டு சென்றதில் இருந்து அவரது தொலைபேசி செயலிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கடந்த 20 ஆம் திகதியில் இருந்து இதுவரை வீடு திரும்பவில்லை என்பது மர்மமாக இருப்பதாகவும் மனைவி, காவல்துறையில் செய்துள்ள முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
நான்கு நாட்களாக வீடு திரும்பாத மலர்ச்சாலையின் உரிமையாளர் குற்றங்களில் ஈடுபட்டார் என்பது தொடர்பான எவ்வித முறைப்பாடுகளும் இல்லை எனவும் அவருக்கு எதிரிகள் இருந்தனர் என்பதற்கான எந்த தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அம்பலாங்கொடை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
