எரிபொருள் கையிருப்புக்கள் அனைத்தும் நாளையுடன் தீர்ந்துவிடும் அபாயம்!
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு பாரிய நெருக்கடிகளை உருவாக்கியுள்ள நிலையில், நாளையுடன் நுரைச்சோலை தவிர்ந்த நாட்டிலுள்ள ஏனைய அனல் மின் நிலையங்களில் எரிபொருள் கையிருப்பு அனைத்தும் தீர்ந்துவிடும் சூழல் உருவாகியுள்ளது.
இதனால் மின்சார நெருக்கடிகள் தொடர்வதுடன், மின்தடைகள் மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள அனல் மின் நிலையங்களில் கையிருப்பில் உள்ள எரிபொருள் இருப்பு தொடர்பான விபரங்களை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
எரிபொருள் முடிவுறும் தருவாயில்
அனல் மின் நிலையங்களில் எரிபொருள் கையிருப்புகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி சப்புகஸ்கந்தையின் இரண்டு அனல் மின் நிலையங்கள் மற்றும் பார்கே அனல் மின் நிலையங்களில் 04 நாட்களுக்கு தேவையான டீசல் கையிருப்பில் உள்ள போதிலும், ஏனைய நிலையங்களில் ஒரு நாளுக்கு தேவையான டீசல் மாத்திரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெலனி திஸ்ஸ, மத்துகம, கொலன்னாவ, எம்பிலிப்பிட்டிய உள்ளிட்ட பகுதிகளிலுள்ள அனல் மின் நிலையங்களின் டீசல் கையிருப்புக்கள் நாளையுடன் நிறைவடைகின்றன.
பகிரங்கப்படுத்திய ஐ.பி.சி தமிழ்
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் நோயாளர் காவுவண்டிகள் சுப்பர் டீசல் இன்மையால் முடக்கத்திற்குள் செல்லும் நிலையில், அந்த வண்டிகளுக்கு கொலன்னாவை அனல் மின் நிலையத்தில் இருந்தே எரிபொருளை பெறவேண்டிய ஒரு தெரிவு காணப்பட்ட போதிலும், அங்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை மேலும் அச்ச நிலையை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி, கோப்பாய், வேலணை, புங்குடுதீவு, மற்றும் அச்சுவேலி ஆகிய வைத்தியசாலைகளில் நோயாளர் காவு வண்டிகள் எரிபொருள் இல்லாமையினால் முடங்கிய விடையத்தை ஐ.பி.சி தமிழ் பகிரங்கப்படுத்தியிருந்த நிலையில் இந்த செய்தி வந்துள்ளது.
மாத்தறை அனல் மின் நிலையங்களில் முற்றாகத் தீர்ந்த கையிருப்பு
இதேவேளை எம்பிலிப்பிட்டி மற்றும் மாத்தறை அனல் மின் நிலையங்களின் தற்போதைய தரவுகளின் படி டீசல் கையிப்புக்கள் முற்றாக தீர்ந்துவிட்டன.
எனினும் புத்தளம் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் மாத்திரம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரையில் சுமார் 5 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிவாயு கையிருப்பில் உள்ளதாக கூறப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த நிலையில் எரிபொருள் தட்டுப்பாட்டால் திடீர் மின்சார தடைகளை சீரமைக்கும் பணிகளில் தாமதம் ஆகக்கூடும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதனால் நாட்டின் பல பகுதிகளும் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.