மண்ணெண்ணெய் பெறுவதற்கு மிக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் மயங்கி விழுந்த பரிதாபம்!
மண்ணெண்ணெய் பெறுவதற்காக கொட்டகலை நகரில் வரிசையில் காத்திருந்த மக்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
இன்று அதிகாலை 2 மணி முதல் மிக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.
இதனால் வரிசையில் நின்ற சிலர் மயக்க நிலையில் காணப்பட்டதோடு, ஒரு சிலர் மயங்கி விழுந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பல மணிநேரம் கால்கடுக்க வரிசையில் காத்திருந்த மக்களுக்கு 250 ரூபாவுக்கு மட்டுமே மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டது. இதனால் மக்கள் விரக்தியடைந்தனர்.
குறைந்த பட்சம் ஐந்து லீட்டராவது வழங்கியிருக்கலாம், அவ்வாறு இல்லாமல் 250 ரூபாவுக்கு வழங்கினால், அதனை வைத்து என்ன செய்வது? இது பெரும் அநீதியாகும் என மக்கள் கவலை வெளியிட்டனர்.
ஒரு நாள் வருமானத்தை, தொழிலை இழந்தே வரிசையில் நின்றோம். ஆனாலும் ஏமாற்றப்பட்டுள்ளோம். இந்த சாபம் ஆட்சியாளர்களை சும்மா விடாது என வரிசையில் காத்திருந்த மக்கள் உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தினர்.