நள்ளிரவு முதல் அதிகரிக்கிறது எரிபொருள் விலை - ரில்வின் சில்வா!
எரிபொருட்களின் விலைகளை இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கும் தயார் நிலைகள் காணப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
நாட்டு மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீதும், அரச தலைவர் மற்றும் பிரதமர் மீதும் கடும் கோபம் இருக்கின்றது. குறிப்பாக புதிய பிரதமர் மீது மக்களுக்கு கடும் கோபம் உள்ளது.
ரணில் பதவியேற்றதன் பின்னரே வரிசை அதிகரிப்பு
இவ்வாறான நிலையில், நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் அதனை அதிகரித்து வருகின்றார்.
ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்ற பின்னரே நீண்ட எரிபொருள் வரிசைகள் ஏற்பட்டன.
எரிபொருள் முற்றாக இல்லாமல் போய்விடும். புதிய பிரதமரே எரிபொருள் விலையை 400 ரூபா என்ற மட்டத்திற்கு கொண்டு சென்றார். மீண்டும் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுகிறது.
அப்போது ஒரு லீட்டர் 500 ரூபா என்ற மட்டத்திற்கு செல்லும். நாட்டு மக்கள் வாழ்வதற்கு முடியாத நெருக்கடியும் பிரச்சினைகளும் உள்ளன. எரிபொருள் வரிசைகளில் இறப்போரின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
மக்களின் வாழ்க்கையுடன் விளையாடும் அரசாங்கத்திற்கு இவை பற்றி எந்த பொறுப்பும் இல்லை. தற்போதைய பிரதமர் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அதிகரித்து, ராஜபக்சவினரை பாதுகாத்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தலைவர்களை அடக்கும் வேலையை செய்து வருகிறார்.
இதனால், இந்த அடக்குமுறையை உடனடியாக கைவிட வேண்டும், கைது செய்யப்பட்ட அனைவரையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இவர்கள் எவரும் குற்றவாளிகள் இல்லை.
போராட்டக்காரர்களை கைது செய்வதன் மூலம் மக்களின் நிலைப்பாடுகளை நீர்த்து போக செய்து விட முடியாது எனவும் ரில்வின் சில்வா கூறியுள்ளார்.
