காலிமுகத்திடலில் முற்றுகை - போராட்டக்களத்திற்கு அருகில் பறக்கும் ட்ரோன் கமரா ( காணொளி)
மூன்றாம் இணைப்பு
பிரதான ஆர்ப்பாட்டக் களமான காலிமுகத்திடலில் தற்போது பெருமளவான மக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலி முகத்திடலில் இதுவரை நாட்களும் போராட்டத்தில் பங்குகொண்ட பலர் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை நடத்தி வருகின்றனர்.
அத்துடன், ட்ரோன் கமரா ஒன்றும் போராட்டக்களத்திற்கு அருகில், துறைமுக நகரத்திற்கு மேலாக பறந்து வருவதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் இணைப்பு
கொழும்பு மாநகரசபைக்கு முன்பாக தற்போது ஆர்ப்பாட்ட பேரணியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும், நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் மதகுருமார்கள், தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்துகொண்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டகளத்தின் 123ஆவது நாளான இன்றும் மக்கள் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கோட்டா கோ கம பகுதியில் பெருமளவான தற்காலிக கூடாரங்கள் அகற்றப்பட்டிருந்தாலும், ஒரு சில கூடாரங்கள் தற்போது வரை அகற்றப்படாமலேயே இருக்கின்றன.
இந்த நிலையில் காலிமுகத்திடல் போராட்டக்களத்தின் போராட்ட மேடைப் பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
காலிமுகத்திடல் போராட்டக்களத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களின் கைது நடவடிக்கையையும், அரசாங்கத்தின் அடக்குமுறையையும் குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்டித்துள்ளனர்.
இதேவேளை இன்றைய தினம் கொழும்பில் மாபெரும் போராடத்தை முன்னெடுப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.