போராட்டத்தால் நாட்டை ஸ்திரமற்றதாக்கி ஈழத்தை வென்றெடுக்கும் முயற்சியில் புலம்பெயர் அமைப்புக்கள்!
போர் மூலம் பெற்றுக்கொள்ள முடியாத ஈழத்தை, இலங்கையை ஸ்திரமற்ற நிலைமைக்குள் தள்ளி அதனூடாக வென்றெடுக்க புலம்பெயர் தமிழர்கள் முயற்சித்து வருவதாக ஐக்கிய போர் வீரர்கள் சமூகத்தின் ஒருங்கிணைப்பாளர் அசேல தர்மசிறி தெரிவித்துள்ளார்.
மேலும் போராட்டத்துடன் சம்பந்தப்பட்டுள்ள அவர்கள் தொடர்ந்தும் அந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர் எனவும், 30 ஆண்டு யுத்தத்திற்காக உயிர் தியாகம் செய்த படையினரை நினைவுகூரும் தினத்தில், தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலைப்புலிகள் அமைப்புக்காக கிறிஸ்தவ அருட்தந்தை ஒருவரும், தமிழ் இளைஞர்கள் சிலரும் காலிமுகத்திடலில் நினைவு நிகழ்வு ஒன்றை நடத்தினர் எனவும் அவர் கூறியுள்ளார்.
கண்டியில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே அசேல தர்மசிறி இதனை கூறியுள்ளார்.
இது தொடாபில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
ஈழத்தை வென்றெடுப்பதற்காக அன்று பிரபாகரனுடன் இணைந்துகொண்ட அருட்தந்தைகளை போராட்ட களத்தில் காணக்கூடியதாக இருந்தது. அதற்கான புகைப்படங்களும் இருக்கின்றன.
ஈழத்தை வென்றெடுக்க முயற்சித்த அருட்தந்தையர்கள் காலி போராட்டத்தில்
புலம்பெயர் புலிகள் போராட்டத்தில் முன்னிலையில் இருக்கின்றனர். அதன் உறுப்பினர் ஒருவர் இதனை அண்மையில் பகிரங்கமாக கூறியிருந்தார்.
இந்த வேலைத்திட்டத்தின் பிரதிபலனாகவே கோட்டாபய ராஜபக்ச நாட்டில் இருந்து தப்பிச் செல்ல நேரிட்டது என புலம்பெயர் தமிழர்கள் இதனை கூறும் போது, போராட்டத்திற்கு ஆதரவு வழங்க பிக்குமார் முன்வந்துள்ளமை வருத்தத்திற்குரிய விடயம்.
32 ஆண்டுகள் நடைபெற்ற கொடூரமான போரில் 27 ஆயிரம் படையினர் மரணித்தனர். காயமடைந்த 64 ஆயிரத்து 500 படையினரில் 14 ஆயிரத்து 500 பேர் வாழ்நாள் அங்கவீனர்களாக மாறியுள்ளனர்.
போராட்டப் போர்வையில் நாட்டை ஸ்திரமற்ற நிலைக்குள் தள்ளும் முயற்சி
ஈழத்தை பெற்றுக்கொள்ள புலம்பெயர் தமிழர்களுக்கு பின்னணியை உருவாக்கிக்கொடுப்பதற்காக அன்று இவர்கள் உயிரை பணயம் வைத்து போரிடவில்லை.
போராட்டம் என்ற போர்வையில் நாட்டை ஸ்திரமற்ற நிலைமைக்கு கொண்டு செல்ல முயற்சித்த அனைத்து போராட்டகாரர்களையும் கைது செய்ய வேண்டும்.
அதிபர் செயலகத்திற்குள் கஞ்சா, ஹெரோயின் பயன்படுத்திய நபர்களுடன் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரையும் புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும்.
ரணிலை விரட்டத் துடிக்கும் பொன்சேகா
பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் போரில் இராணுவத்திற்கு தலைமை தாங்கிய சரத் பொன்சேகா, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி போராட்டம் நடத்த இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கின்றார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவை விரட்டி விட்டு, அவர்கள் அடுத்ததாக யாரை பதவிக்கு கொண்டு வர முயற்சிக்கின்றனர் என்ற கேள்வி எழுவதாகவும் அசேல தர்மசிறி மேலும் தெரிவித்துள்ளார்.