காவல் நிலையத்திற்குள் சென்ற எரிவாயு ஊர்தி- நீண்ட வரிசையில் காத்திருந்ததால் பொதுமகன் ஒருவருக்கு ஏற்பட்ட நிலை!
அம்பலாங்கொடையில் எரிவாயு பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால் ஒருவர் மயங்கி விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் எரிவாயு கொள்கலன்களை கொள்வனவு செய்ய மக்கள் நீண்ட வரிசைகளில் நிற்பதை காண முடிகிறது.
இவ்வாறான நிலைமையிலேயே, அம்பலாங்கொடை பிரதேசத்தில் நேற்று சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்டவரிசையில் நின்றுள்ளனர். அதிகளவான மக்கள் கூடியதன் காரணமாக லிற்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களை ஏற்றி வந்த ஊர்தியை அம்பாலங்கொடை காவல் நிலையத்திற்குள் கொண்டு சென்றுள்ளனர்.
அண்மைய காலமாக சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக மக்கள் வரிசையில் நின்றதால் மோதல் நிலைமைகள் அதிகரித்து வருவதால், எரிவாயு விநியோகத்தின் போது விற்பனையாளர்கள் காவல்துறையின் உதவியை பெற்றுக்கொள்ள நேரிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக காவல் நிலையத்திற்குள் வைத்தே எரிவாயு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு நீண்ட நேரம் வரிசையில் நின்றதன் காரணமாகவே ஒருவர் மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து, அம்பியூலன்ஸ் வண்டியை வரவழைத்து காவல்துறையினர் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.