ராஜபக்ச அரசாங்கத்தை துரத்தி அடித்து நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஓரணியில் திரளுங்கள்- விடுக்கப்பட்ட பகிரங்க அறைகூவல்!
சிறிலங்காவில் ஆளும் ராஜபக்ச அரசாங்கத்தை துரத்தி அடித்து நாட்டை கட்டியெழுப்புவதற்காக எதிர்க்கட்சியினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கட்சியின் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
சிறிலங்கா எதிர்கொண்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க ஐக்கிய தேசிய கட்சியினால் மாத்திரமே முடியும் என்பதை மக்கள் உணர்ந்துகொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 2021ஆம் வருடம் நாட்டின் பொருளாதாரம், சுகாதாரம், சமூகம் என அனைத்து துறைகளும் பாரிய கஷ்ட நிலைமைக்கு தள்ளப்பட்டிருந்தன. அதேநிலையிலேயே புதிய வருடம் பிறந்திருக்கின்றது. அதனால் இந்த வருடமும் பொருளாதார ரீதியில் மக்கள் பாதிக்கப்படும் நிலையே இருக்கின்றது.
ஏனெனில் நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. அதனால் எரிவாயு, பால்மா மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வரிசையில் நிற்கவேண்டிய நிலையே தொடர்கின்றது. அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்திடம் டொலர் இல்லை.
அதனால் பங்களாதேஷிடம் கடன் வாங்கிய இந்த அரசாங்கம் அடுத்த கட்டமாக ஆப்கானிஸ்தானிடம் கடன் வாங்கும் நிலையே இருக்கின்றது. அதனால் 2022ஆம் வருடமும் மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு கஷ்டப்படவேண்டிய வருடமாகவே இருக்கின்றது.
2015இல் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்படும் போதும் நாடு பொருளாதார ரீதியில் பாரிய வீழ்ச்சியடைந்திருந்தது. சர்வதேச ரீதியில் எமது நாடு ஒதுக்கப்பட்டிருந்தது. ஜீ.எஸ்.பி. சலுகை நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் இந்த அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் நாட்டை மீட்டுக்கொள்ள ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு முடியுமாகியது.
அதனால் தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க ஐக்கிய தேசிய கட்சியினால் மாத்திரமே முடியும் என்பதை மக்கள் உணர்ந்து வருகின்றனர்.
எனவே இந்த அரசாங்கத்தை துரத்தியடித்து, ராஜபக்ச ஆட்சியாளர்களிடமிருந்து இருந்து நாட்டை பாதுகாக்க, நாட்டை நேசிக்கும் அனைவரும் ஒன்றுபடவேண்டிய காலம் வந்துள்ளது.
அதற்கு தலைமை தாங்க ஐக்கிய தேசிய கட்சி தயாராக இருக்கின்றது. அதனால் எதிர்க்கட்சி உட்பட அரச விரோத கொள்கையுடைய அனைவரும் எம்முடன் அணிதிறள முன்வர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.