பதவியிலிருந்தும் அரசியலிலிருந்தும் விலகத் தயாராகும் மற்றுமொரு ராஜபக்ச!
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ச கடந்த வியாழக்கிழமை தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார்.
இந்நிலையில் ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தனது பதவியை ராஜினாமா செய்யத் தயாராகி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை தவிர அமைச்சரவையில் ராஜபக்சவினர் எவரும் அங்கம் வகிக்கவில்லை. அவர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்குவதில்லை என கோட்டாபய தீர்மானித்துள்ளார்.
இந்நிலையிலேயே ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலக தயாராகியுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பதவி விலகும் மற்றுமொரு ராஜபக்ச
எனவே அவர் அடுத்த சில வாரங்களில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, அரசியலில் இருந்து ஓய்வுபெற வாய்ப்புள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து பசில் விலகினாலும் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடப்போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
ராஜபக்சாக்களின் தற்போதைய நிலை
ராஜபக்ச குடும்பத்தில் சமல் ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச, முன்னாள் ராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச ஆகியோர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.