அரச பணியாளர்களுக்கு சம்பள உயர்வு! ரணில் தகவல்
சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச பணியாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இந்த சம்பள உயர்வு அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் அலுவலக தரப்புக்களை கோடிட்டு கொழும்பின் ஊடகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அத்துடன் அவர் வரவுசெலவுத்திட்ட உரையின் போது தனியார் துறை பணியாளர்களுக்கும் சம்பள உயர்வுக்கான கோரிக்கையை பிரதமர் விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், வேதன உயர்வுக்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு வரவு செலவுத்திட்டத்தை தயாரிக்கும் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
2015ஆம் ஆண்டில் வேதன உயர்வு
இறுதியாக 2015ஆம் ஆண்டிலேயே பொதுத்துறையினருக்கான வேதனம் 10,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் அழைப்பை ஏற்று அவர்கள் வரவுள்ளனர். இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் வழிமுறைகள் குறித்து அவர்கள் கலந்துரையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.