இந்திய இழுவை படகுகளை விரட்டும் சிறப்பு நடவடிக்கையில் சிறிலங்கா படையினர்!
சிறிலங்கா கடற்படையினர், வடக்கின் தீவுக் கடற்பரப்பில், அத்துமீறி தொழிலில் ஈடுபட்ட இந்திய இழுவை படகுகளை விரட்டும் சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்த நடவடிக்கையின் போது, சர்வதேச கடல் எல்லைக் கோடு (IMBL) வழியாக முல்லைத்தீவுக்கு அப்பால் இலங்கையின் கடற்பரப்பில் தொழிலில் ஈடுபட்ட 09 இந்திய மீனவர்களுடன் இந்திய இழுவை படகு ஒன்று கைப்பற்றப்பட்டது.
வெளிநாட்டு மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடியை தடுக்கும் திட்டம்
வெளிநாட்டு மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளைத் தடுக்கவும், உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் கடற்படையினர் தீவுக் கடற்பரப்பில் தொடர்ந்து ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய இழுவை படகுடன் 09 இந்திய மீனவர்கள், திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு, திருகோணமலை கடற்றொழில் பரிசோதகரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட உள்ளனர்.
இதேவேளை, நாட்டின் கடற்றொழில் வளங்களையும், உள்ளூர் மீனவ மக்களின்
வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதற்காக வழக்கமான நடவடிக்கைகளை தொடந்தும்
மேற்கொள்ளவுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.