கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக பாரிய முற்றுகைப் போராட்டம்!
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிரா கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய இணைப்பாளர் ஹர்மன் குமார தலைமையில் குறித்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வட மாகாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக பல எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், இன்றைய தினம் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இருக்கின்ற அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த மீனவர்கள் ஒன்றிணைந்து இந்திய இழுவைப் படகு வருகையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் தங்களது கடல் வளத்தை தாங்களே ஆள வேண்டும் என்றும் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கட்டுள்ளது.
மேலும் கடல் வளத்தை சூறையாடும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மௌனம் காப்பது ஏன் என்று பல கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பு புகையிரத நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
சில வாரங்களுக்கு முன் இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் இலங்கை மீனவர்கள் இருவர் உயிரிழந்த நிலையில் குறித்த விடயம் பூதாகரமாக வெடித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக மாவட்ட ரீதியாக தங்களது எதிர்ப்பை தெரிவித்த தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்ட அலுவலகங்கள் இலங்கை அரசாங்கத்துக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி காட்ட வேண்டும் என்பதற்காக இன்று கொழும்பை முற்றுகையிட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.