ஆரம்பமாகிறது தமிழர் தாயகம் மற்றும் தமிழ் நாட்டிற்கிடையேயான சேவை!
தமிழ்நாட்டின் பாண்டிச்சேரி, காரைக்கால் போன்ற துறைமுகங்களுக்கும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இடையிலான சரக்கு படகு சேவை நடத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கூடிய விரைவில் சரக்கு படகு சேவை ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
குறித்த படகு சேவை மூலம் தேவையான மண்ணெண்ணெய், டீசல் போன்ற எரிபொருட்களையும், உரம், பால்மா, மருந்து பொருட்கள் உட்பட்ட அத்தியாவசியப் பொருட்களையும் நியாயமான விலையில் தேவையானளவு எடுத்துவர முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வலியுறுத்தி வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த படகு சேவையை ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க முயற்சிகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, பலாலி - திருச்சி, சென்னை இடையிலான விமான சேவையையும் திட்டமிட்டபடி ஜூலை 1 ஆம் திகதியிலிருந்து ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
