இலங்கையின் நல்லிணக்க பொறிமுறை குறித்து பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி
மனித உரிமை விடயத்தில் பிரித்தானியாவின் (UK) முன்னுரிமைக்குரிய நாடாக இலங்கை (Sri Lanka) விளங்குகின்றது என பிரித்தானியாவின் பொதுநலவாய வெளிவிவகார அபிவிருத்தி அலுவலக இராஜாங்க அமைச்சர் மேரி டிரெவல்யன் (Marie Trevelyan) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இலங்கையில் நல்லிணக்கம் தொடர்பில் பிரித்தானியாவின் நிலைப்பாடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் நல்லிணக்க பொறிமுறை குறித்து பாதிக்கப்பட்ட சமூகத்தினர் வெளியிட்டுள்ள குறிப்பிடத்தக்க சந்தேகங்களை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம் என இராஜாங்க அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சமூகங்கள்
நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்காக அனைவரையும் உள்வாங்கிய நடைமுறையின் அவசியத்தை பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எந்த பொறிமுறையும் சுயாதீனமானதாக அர்த்தபூர்வமானதாக பாதிக்கப்பட்ட சமூகங்களின் நம்பிக்கையை பெறக்கூடியதாக காணப்படவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் முன்னைய நிலைமாற்றுக்கால செயற்பாடுகளின் தொடர்ச்சியாகவும் பொறுப்புக்கூறலிற்கான பாதைகளை வழங்குவதாகவும் காணப்படவேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
