திட்டமிட்டு சிதைக்கப்படும் தமிழர் தாயகம் - சர்வதேசத்திற்கு பௌத்த நாடாக சித்தரிக்கும் நிகழ்ச்சி நிரல்!
இலங்கை முழுவதும் சிங்கள பௌத்த நாடு என்பதனை சர்வதேச மட்டத்தில் வெளிப்படுத்துவதன் நிகழ்ச்சி நிரலே நெடுந்தீவு வெடியரசன் கோட்டை தொடர்பான கடற்படையின் பதாகை அமைப்பு என யாழ் மாவட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார்.
நெடுந்தீவு வெடியரசன் கோட்டை பகுதியில் அண்மையில் பௌத்த விகாரை அடையாளபடுத்தல் தொடர்பாக எழுந்த அண்மைய நாள் சர்ச்சைகள் தொடர்பாக நேரடியாக சென்று பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“2007 ஆம் ஆண்டு வெடியரசன் கோட்டை என இது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இங்கு வாழுகின்ற நெடுந்தீவு வாழ் மக்கள் பாரம்பரியமாக இது வெடியரசன் கோட்டை என்றே அடையாளபடுத்தி வருகின்றார்கள். யுத்தம் நிறைவடைந்த பின்னர் 2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவர்கள் இது சிங்கள பௌத்திற்கு உரியது என்ற போர்வையில் பௌத்த சிங்கள மயமாக்கல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
திரிபுபடுத்தப்பட்ட பதாகை
இங்கு தமிழ் பௌத்தம் நிலவியதற்கானசான்றுகளை எத்தனையோ அறிஞர்கள் கூறியிருக்கின்றார்கள். நாங்கள் நெடுந்தீவில் இறங்கு துறைமுகத்தில் இறங்கி வருகை தருகின்ற பொழுது இதன் சரித்திரத்தை வெளிப்படுத்தும் முகமாக சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் சிங்கள பௌத்தமாக திரிபுபடுத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினுடைய அட்டவணைப்படி அவர்கள் எவ்வாறு வடமாகணத்தை சிங்களமயமாக்கலாம் என்று நினைக்கின்றார்களோ அவ்வாறாக அன்றைய ராஜபக்சக்கள் காலம் முதல் இன்றைய ரணில் விக்கிரமசிங்க காலம் வரை அவர்கள் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் சிங்களமயமாக்கத்திற்காக எடுத்து வருகிறார்கள்.
இங்கே பயன்படுத்தப்பட்ட சொற்பதங்களும் தமிழில் தான் இருக்கின்றன சில சொற்பதங்கள் தமிழில் தான் இருந்து, அழிந்துள்ளதாகவும் இது தமிழ் பௌத்த ஸ்தானமே என்று துறைசார் பேராசிரியர்கள் குறிப்பிடுகின்றார்கள். ஆனால் அவற்றையெல்லாம் இப்பொழுது தங்களுடையது என்று இந்த கடற்படையினரை இராணுவத்தினரை விமானப்படையினரை எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு இவர்கள் இங்கே ஒரு அமுக்கத்தை கொடுக்கின்றார்கள்.
தமிழரை அடக்கி ஆளும் முயற்சி
எவ்வளவு தூரம் தங்களுடைய ஆதிக்கத்தை பிரயோகிக்க முடியுமோ அதனை செய்து தமிழர்களை அடக்கி தங்களுடையது என்று இப்பொழுது பரவலாக சொல்லிக் கொண்டு போகின்றார்கள். அங்கே நிலாவரை கிணற்றிலும் அவ்வாறு தான் நடந்தது. குருந்தூர் மலையிலும் இது நடக்கின்றது எல்லா இடங்களிலும் நடக்கின்றது.
துரதிஷ்டவசமாக எங்களுடைய பலம் குன்றிய இந்த நேரத்தில் இது அவர்களுக்கு வசதியாக போய்விட்டது. நாங்கள் எங்களுடைய எதிர்ப்புகளை காட்ட வேண்டிய இடத்தில் காட்ட வேண்டும் நாங்கள் எவ்வளவுதான் எதிர்ப்புகளை காட்டினாலும் நாவற்குழியில் எவ்வளவு பெரிய விகாரை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அங்கு பெரிய பெரிய நிகழ்வுகள் நிகழ்ச்சிகள் எல்லாம் நடக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் அன்றைய காலத்தில் பௌத்த விகாரைகளே இல்லாமல் இருந்தது. ஆனால் இப்பொழுது எத்தனையோ இடங்களில் புதிதாக விகாரைகள் முளைத்துள்ளன. அதனுடன் இணைந்து விடுதிகள் முளைத்துள்ளன இப்பொழுது சிங்கள சுற்றுலா பயணிகள் சிங்கள தேசத்திலிருந்து உல்லாச பயணம் என்று சொல்லிக்கொண்டு எத்தனையோ பேருந்துகள் வருகின்றன.
பௌத்த நாடாக்கும் திட்டம்
அவற்றுக்குரிய இடங்களும் தயாரிக்கப்படுகின்றன எல்லா வசதிகளும் ஏற்படுத்தப்படுகின்றன. எந்த வசதிகளும் இங்கிருந்து போகின்ற உல்லாச பயணிகளுக்கு ஏற்படுத்தப்படவில்லை. இங்கே அவர்களுடைய முழு முயற்சியாக எடுத்துக் கொண்டிருப்பது உலகத்திற்கே இலங்கை முழுமையான ஒரு பௌத்த நாடு என்பதனை வெளிப்படுத்துவதாக நிரூபிப்பதற்காக இதனை தொடர் முயற்சியாக செய்கின்றார்கள்.
நாளைக்கு ரணில் விக்ரமசிங்க சென்று சஜித் பிரேமதாச வந்தாலும் சஜித் பிரேமதாச சென்று அனுகுமார திசாநாயக்க வந்தாலும் அல்லது வேறு ஒருவர் வந்தாலும் இதனை தான் செய்யப் போகின்றார்கள். இதுதான் நடந்து கொண்டிருக்கின்றது. கடந்த 75 வருட காலமாக, தமிழர் தரப்பிலும் நாங்கள் நிறுத்த முடியாமல் இருக்கின்றோம் இவற்றையெல்லாம் கண்டு இவ்வாறான அத்துமீறல்களை தடுக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவிற்கும் இருக்கின்றது.
இவ்வாறு நடந்து கொண்டிருப்பது இந்தியாவிற்கும் தெரியும். ஆனால் அவர்களாலும் கூட இதனை தடுத்து நிறுத்த முடியாமல் இருக்கின்றது. அவர்கள் எல்லோரும் நல்ல பிள்ளைகள் போல் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றார்கள். நாங்கள் தான் இந்தியாவிற்கு எல்லாமாகவும் இருக்கின்றோம். இந்தியாவின் வடநாட்டில் இருந்து வந்த பௌத்தம் இங்கு தமிழ் பௌத்தமாக இருந்திருப்பதற்கான சான்றுகள் காணப்படுகின்றது.
இந்தியாவின் தலையீட்டிற்கான தருணம்
எல்லாம் இந்தியாவிலிருந்து தான் கொண்டுவரப்பட்டது இதனை மாற்றி அமைக்கப் போகின்றார்கள் வரலாற்று தவறு இழைக்கபடுகின்றது. இது, இந்தியா தலையிட்டு தடுத்து தமிழர்களுடைய இருப்பை பாதுகாக்க வேண்டிய தருணமாகும். அவர்களையும் குற்றம் சொல்லி பிரயோசனமில்லை. பூகோள ரீதியான அரசியல் மாற்றங்களும் அவர்களுடைய செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
இது எங்களுடைய சிங்கள பௌத்த அரசாங்கத்திற்கு வசதியாக அமைந்துள்ளது. குறிப்பாக இன்றைய தினம் கடற்படையினருடைய அத்துமீறலும் நெடுந்தீவு இறங்கு துறைமுகத்தில் காணப்படுகின்றது. நாங்கள் இங்கே வந்து இறங்கு துறைமுகத்தில் பதாகைகளை புகைப்படம் எடுப்பதற்கு கூட பல்வேறுப்பட்ட தடைகளை கடப்படையினர் ஏற்படுத்தியுள்ளனர்.
ஆக மொத்தத்திலே சிங்கள பௌத்தமயமாக்கலுக்கு இலங்கையினுடைய முப்படையையும் ஏகோபித்த வகையில் இந்த அரசு பயன்படுத்திக் கொண்டிருக்கின்றது” என அவர் மேலும் தெரிவித்தார்.