பிச்சைக்கார நாடாக மாற்றிய இந்த மோசடி அரசாங்கம் இருக்கும் வரை எந்த சர்வதேசமும் எமக்கு உதவாது!
இந்து சமுத்திரத்தின் முத்து என்று அழைக்கப்பட்ட இலங்கை இன்று யாசகம் பெற்றுக்கொள்ளும் நிலைமைக்கு சென்றுள்ளமைக்கு நாட்டை ஆட்சி செய்தவர்களே காணம் என யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
மேலும் சர்வதேச நாடுகள் இலங்கைக்கு உதவிகளை வழங்க தயாராகவுள்ள போதிலும் ஊழல் நிறைந்த அரசாங்கத்தை நம்பி உதவிகளை வழங்க தயாரில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
74 ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்டவர்கள் மக்களை தம்முடைய வாக்குகளுக்காக பாவித்தார்கள். ஆனால் இந்த நாட்டிலிருந்த வளத்தை எல்லாம் சுரண்டி விட்டார்கள். ஒருவிதமாக கடைசியில் மிக பாரதூரமான சுரண்டல்களுடன் நாடு யாசகம் எடுக்கின்ற நாடாக வந்துவிட்டது.
இன்று நாடு யாசகம் எடுக்கின்ற நாடாக மாறி உள்ளது. இதற்கு காரணமான அனைவருமே மறுமொழி சொல்ல வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். இந்த நாட்டின் பிரதிநிதிகள் என்று கூறினால் எங்களுடைய பிரச்சனை எல்லாம் தீர்ப்பதற்கு வழிமுறை உள்ளது.
அவற்றைச் செய்யாமல் மக்களை வாக்குகளுக்காக பாவித்து இருக்கின்றார்கள். மக்களை ஏமாற்றி வாக்கினை பெற்றிருக்கின்றார்கள். அவ்வாறு நாட்டு மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று நாடு சுரண்டப்படுவதால் இன்று நாடு படுகுழியில் போய்யுள்ளது.
அண்மையில் சர்வதேச நாணய நிதியம் முன்னாள் பிரதமரிடம் 37 கேள்விகள் கேட்க இருந்தது. அதாவது ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் கேட்கவிருந்தார்கள். ஆனால் அவர் வைத்தியசாலையில் அனுமதி ஆகிவிட்டார்.
அதனால் அவர்கள் கேட்க வேண்டிய கேள்வியினை கேட்காது சென்று விட்டார்கள். எந்த நாடும் எமக்கு உதவி செய்ய தயாராக இருக்கின்றது. ஆனால் மோசடி ஊழல் நிறைந்த இந்த நாட்டு அரசாங்கத்தை நம்பி எந்த நாடும் நமக்கு உதவுவதற்கு தயாராக இல்லை.
அதனை முதலில் நிவர்த்தி செய்தால் மாத்திரமே எமக்கு ஏனைய நாடுகளின் உதவி கிடைக்கும். ஆனால் அதற்கு பொறுப்பானவர்கள் ஓடி ஒளிந்து விட்டார்கள் இந்த நாட்டின் தற்போதைய ஆட்சியாளர்களின் பெருந்தன்மையால் இந்த நாடு ஒரு யாசகம் நாடாக மாறிவிட்டது என தெரிவித்தார்.
