இரவோடு இரவாக பணம் படைத்தவர்களுக்கு வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் - முகாமையாளர் கைது!
தலைமன்னாரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்டம் தலைமன்னார் பகுதியில் அமைந்துள்ள பியர் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளரே கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைமன்னார் பியர் எரிபொருள் நிரப்பு நிலையம் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுடையது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முற்றுகை
இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு கிடைக்கப்பெற்ற மண்ணெண்ணெய் மக்களுக்கு வழங்கப்படுவதற்கு முன்பே இரவோடு இரவாக சில வசதி படைத்தவர்களுக்கு நூற்றுக்கணக்கான லீற்றர் அனுமதி இன்றி வழங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மண்ணெண்ணெய்க்காக காத்திருந்த மக்கள் ஏமாற்றமடைந்த நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
தலைமன்னார் பிஜர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு நேற்றைய தினமும், இன்று நள்ளிரவும் என இரு தடவைகளாக 6500 லீற்றர் மண்ணெண்ணெய் படி சுமார் 13000 லீற்றர் மண்ணெண்ணெய் மக்களுக்கு விநியோகிப்பதற்காக வழங்கப்பட்டிருந்தது.
மக்கள் ஏமாற்றம்
இந்த நிலையில் அதிகாலை நூற்றுக்கணக்கான மக்கள் எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் நின்ற நிலையில் 400 ரூபா வீதம் 500 பேருக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகக்கப்படும் என எரிபொருள் நிரப்பு நிலையத்தினரால் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அப்பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த போது 1000 பேருக்கு 400 ரூபாய் வீதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மக்கள் குடும்ப அட்டைகளிலும் பதிவுகளை மேற்கொண்டு மண்ணெண்ணெய் பெற சென்ற நிலையில் 200 நபர்களுக்கு கூட வழங்காத நிலையில் மண்ணெண்ணெய் நிறைவடைதுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் குழப்பம்
இதனால் குழப்பமடைந்த மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இந்த நிலையில் எரிபொருள் தாங்கியை மக்கள் முன்னிலையில் சோதித்த நிலையில் தாங்கியிலும் மண்ணெண்ணெய் இருக்கவில்லை.
ஆகவே 13000 லீற்றர் மண்ணெண்ணெய்க்கு என்ன நடந்தது என விசாரித்த நிலையில், 250 லீற்றர் அங்கு பணி புரியும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டதாக எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இரவிரவாக விநியோகிக்கப்பட்ட மண்ணெண்ணெய்
ஆனாலும் தங்களுக்கு அவ்வாறு வழங்கப்படவிலை என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் எரிபொருள் வழங்கப்பட்ட பதிவுகளை சோதித்த நிலையில் இன்று அதிகாலை பணம் படைத்த சிலருக்கு நூறுக்கு மேற்பட்ட லீற்றர்கள் வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளரை கைது செய்யுமாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.





