காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஆரம்பமானது விசாரணை!
மட்டக்களப்பு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விசாரணைகள் இன்று இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்முனை தென் எருவில் பற்று, களுவாஞ்சிகுடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற விசாரணையில் கொழும்பு மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு விசாரணைகளை மேற்கொண்டு முறைப்பாடுகளைப் பதிவு செய்தனர்.
இதன்போது காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் சென்று தமது முறைப்பாடுகளைப் பதிவு செய்தனர்.
முறைப்பாடுகள் பதிவு
மாவட்டத்தில் மொத்தமாக 450 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள செங்கலடி, மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலகங்களில் 5 நாட்கள் இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, முறைப்பாடுகள் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்வைக்கும் கோரிக்கைக்கு இணங்க அவர்களுக்குத் தேவையான உதவிகளை மேற்கொள்வதற்கு காணாமல்போனோர் பற்றிய அலுவலலகம் பரிந்துரை செய்யும் எனவும் இதன்போது குறித்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.








