பாதுகாப்பற்ற முறையில் செலுத்தி மக்களை மோத முற்பட்ட அரச பேருந்து - சாரதி மீது தாக்குதல்!
முல்லைத்தீவில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
அவர்களின் போராட்டம் காலை 11.00 மணிளவில் நிறைவிற்கு கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் வவுனியாவில் இருந்து முல்லைத்தீவிற்கு சென்ற வவுனியா சாலைக்கு சொந்தமான பேருந்தினை நேர அட்டவணைக்கு மாறாக சாரதி எடுத்து செல்லமுற்பட்டுள்ளார்.
இதன்போது பேருந்து சாரதி மக்கள் பேருந்தில் ஏறுவதற்கு முன்னதாகவே மக்கள் ஏறுவதை கவனிக்காது பேருந்தை எடுத்துச் செல்லும் அவசரத்தில் பேருந்தை செலுத்தியுள்ளார்.
மக்களை மோத முற்பட்ட அரச பேருந்து
அதன் போது வீதியில் கூடிய தனியார் பேருந்து சாரதிகள் நடத்துனர்கள் குறித்த பேருந்தினை மறித்தபோதும் அதனை பொருட்படுத்தாது பேருந்தினை எடுத்து சென்றுள்ளார்.
இதன்போது மக்கள் சிலர் மீது பேருந்து மோத முற்பட்டதோடு, பேருந்தில் ஏறிய பயணிகளை உரியவகையில் ஏற்றாது அபாயகரமான முறையில் சாரதி பேருந்தினை எடுத்து சென்றுள்ளார்.
இதனையடுத்து பேருந்தினை துரத்தி சென்ற சிலர் நகரில் இருந்து சற்று தொலைவில் வவுனியா நோக்கி புறப்பட்ட பேருந்தினை மறித்துள்ளதுடன், சாரதி மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.
காவல்துறையின் காவலில் பேருந்து
இதன்போது காயமடைந்த சாரதி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பேருந்தினை முல்லைத்தீவு காவல்துறையினர் கொண்டு சென்றுள்ளார்கள்.
காவல்துறையின் கண்முன்னேயே மக்கள் பேருந்தினை மறிக்க மறிக்க அதனை எதுவித பாதுகாப்பும் அற்ற நிலையில் அரச பேருந்து சாரதி எடுத்து சென்றமை மக்கள் மத்தியில் விசனத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.





