அருங்காட்சியகத்திற்கு வழங்கப்படவுள்ள விடுதலைப் புலிகள் தலைவரின் நினைவுப் பரிசு! நீதிமன்றின் விசேட உத்தரவு
2008ஆம் ஆண்டு அனுராதபுரத்தில் முன்னாள் இராணுவ தளபதி ஜனக பெரேரா உள்ளிட்ட 31 பேரைக் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மூலம் படுகொலை செய்த வழக்கின் இரண்டாவது குற்றவாளிக்கு நீதிமன்றம் விசேட உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனினால் நினைவுப் பரிசாக வழங்கிய ஒரு பொருளை எதிர்காலத்தில் உருவாக்கப்பட உள்ள அருங்காட்சியகத்திற்கு வழங்குமாறு குறித்த குற்றவாளிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் உற்பத்தி செய்யப்பட்ட பெறுமதி மிக்க கைக்கடிகாரம், சைனைட் குப்பி உள்ளிட்ட சில பொருட்களையே இவ்வாறு ஒப்படைக்கும்படி உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படுகொலை செய்த வழக்கின் மேன்முறையீட்டு மனு விசாரணை நேற்று இடம்பெற்றது.
ஆயுள் தண்டனை
இதன்படி குறித்த வழக்கில் இரண்டாவது குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

அனுராதபுரம் மேல் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனைக்கு எதிராகக் குற்றவாளி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம், அத்தண்டனையை உறுதி செய்து இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மதவாச்சி, சியம்பலாகஸ்கட பகுதியைச் சேர்ந்த முஹம்மது உமர் ஹபிதாப் (உமர் ஹபிதாப் என்றும் அழைக்கப்படுபவர்) என்பவரே இந்த வழக்கின் இரண்டாவது குற்றவாளியாவார்.
இவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருந்த 48 குற்றச்சாட்டுகளில் 31 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, 2019 மே 21 அன்று அனுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி கேமா ஸ்வர்ணதிபதி இவருக்கு ஆயுள் தண்டனை விதித்திருந்தார்.
உயர் மதிப்புமிக்க பரிசுகள்
இந்தத் தீர்ப்புக்கு எதிராக அவர் முதலில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அங்கேயும் மேல் நீதிமன்றத் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தார்.
தற்போது உயர் நீதிமன்றமும் அத்தீர்ப்பை உறுதி செய்துள்ளது. குற்றவாளிக்குச் சொந்தமான அனைத்து சொத்துகளையும் அரசுடமையாக்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் குற்றவாளிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் உயர் மதிப்புமிக்க சுவிஸ் ரக கைக்கடிகாரம், சைனைடு குப்பி மற்றும் சட்டை ஆகியவற்றைத் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் நிறுவப்படவுள்ள அருங்காட்சியகத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டிருந்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |