மன்னாரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்கான பொது அஞ்சலி நிகழ்வானது முள்ளிவாய்க்கால் பகுதியில் உறவுகளை இழந்தவர்களின் கண்ணீருடன் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் நினைவு கூரப்பட்டு வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக மன்னார் மாவட்டத்திலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஏற்பாட்டில் அதன் மாவட்ட இணைப்பாளர் சகாயம் திலீபன் தலைமையில் இன்று காலை 11 மணியளவில் மன்னார் புதிய பேருந்து நிலையத்தின் முன்பாக முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
முள்ளிவாய்க்கால் பகுதியில் இரண்டு பிள்ளைகளை பறிகொடுத்த தாயினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன் நிகழ்விற்கு சென்ற அனைவரும் மலர் தூவி தங்களுடைய அக வணக்கத்தை செலுத்தியுள்ளனர்.
இதன்போது முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்காக எந்த ஒரு நீதியான தீர்வும் சர்வதேசத்தாலோ இலங்கை அரசினாலோ இதுவரை கிடைக்கவில்லை என்ற பெற்றோரின் மனக்குமுறல்கள் மகஜராக வாசித்துக் காட்டப்பட்டது.
அத்துடன் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தின் நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் பணியாளர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மனிதநேயச் செயற்பாட்டாளர் மதத்தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.