உதவியை அதிகரிக்கவும்! இந்திய அரசிடம் கோரிக்கை
இந்திய நிதி அமைச்சருடன் சந்திப்பு
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று(27) சந்தித்த, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை தீர்க்க, இந்தியாவின் ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்குமாறு இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வேலைத்திட்டம் இறுதி செய்யப்படும் வரையில், இலங்கை எதிர்நோக்கும் நிதி நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு, உயர்ஸ்தானிகர் இந்திய நிதி அமைச்சரிடம் கோரியுள்ளார்.
இதேவேளை, "இந்த சூழலில், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருளுக்கான கடன்கள் மற்றும் கொடுப்பனவுகளின் இருப்பு போன்ற வடிவங்களில் இந்தியா வழங்கும் உதவிகளை அதிகரிப்பது மற்றும் மறுசீரமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை அமைச்சரும் உயர் ஸ்தானிகரும் ஆராய்ந்தனர்" என்று இலங்கை உயர் அதிகாரியின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 3 பில்லியன் உதவி
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பொருளாதார உரையாடலை நடத்துவதற்கான நிறுவப்பட்ட உத்தியோகபூர்வ நிலைப் பொறிமுறையானது தொடர வேண்டும் என்றும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இந்தியா இலங்கைக்கு 3 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருளாதார உதவிகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.