ரணில் பிரதமர் பதவியிலிருந்து விலகாவிடின் அவர் அரச தலைவராக பதவியேற்பதை தடுக்க முடியாது!
அரச அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியதை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகாவிடின் அவர் பதில் அரச தலைவராக பதவியேற்பதை தடுக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
காலி முகத்திடல் போராட்டக்காரர்களுடன் இன்று(12) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
30 வருடகாலமாக அதிகார பேராசை
தொடர்ந்து கருத்துரைத்த அவர், "கடந்த 30 வருடகாலமாக அதிகார பேராசைக்காக காத்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகுவார் என்பதை எதிர்பார்க்க முடியாது.
அரச அதிபர் பதவி விலகியதை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகாவிடின் அவர் பதில் அரச அதிபராக பதவியேற்பார், அதனை தடுக்க முடியாது.
ஆகவே அவர் பதில் அரச அதிபராக பதவியேற்றதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்னர், அதனை தடுக்கும் வகையில் அனைவரும் ஒன்று திரள வேண்டும். ஏனெனில் இவர் வெட்கமற்ற நபர் என்பதை நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளேன்.
இவரது வீடு எரிக்கப்பட்டுள்ளமை கண்டனத்திற்குரியது. இருப்பினும் அச்சம்பவம் சந்தேகத்திற்குரியது.
ரணில் பதவியேற்றால் பெரமுனவுக்கும் பிரிச்சினையாக இருக்கும்
பதில் அரச தலைவராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றால் பெரமுனவிற்கும் அது பிரச்சினையாக அமையும். அரசாங்கத்திற்குள் திருடர்கள் பலர் உள்ளார்கள்.
பொதுஜன பெரமுன தமது விருப்பத்திற்கமைய பிரதமர், அரச அதிபர் ஆகியோரை தெரிவு செய்ய கூடும், ஆகவே அரச அதிபர் பதவி விலகலுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலகும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.
பதவியேற்பை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவது சாத்தியமற்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலக்கும் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.“ எனக் குறிப்பிட்டார்.
