தாயகம் மற்றும் தமிழக மீனவர்களை மோத வைக்கும் இராஜதந்திர முயற்சியா? டக்ளஸிடம் கூட்டமைப்பு பகிரங்க கேள்வி!
இந்திய இழுவைப்படகு பிரச்சினைக்கு இரு மாதங்களுக்குள் தீர்வு கிடைக்கும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றில் கூறியிருந்தார்.
அவரது இந்த கருத்தை சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், கடலுக்கு செல்பவர்கள் மரணிக்கும் சம்பவங்கள் தற்போதும் இடம்பெறுவதாக ஆதங்கம் வெளியிட்டார்.
அத்தோடு இதனை கண்டுகொள்ளாமல் பிரச்சினைக்கு தீர்வை காணாமல் இருப்பது தாயகம் மற்றும் தமிழக மீனவர்களை மோதவைக்கும் இராஜதந்திர முயற்சியா என்றும் கேள்வியெழுப்பினார்.
இன்று இடம்பெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கடற்தொழில் அமைச்சரிடம் வினவினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜதந்திர நடவடிக்கை என்ற கருத்து அரசியல் உள்நோக்கத்தோடு எழுப்பப்பட்டது என சாடினார்.
கடந்த 5 வருட ஆட்சியில் எதுவும் செய்யவில்லை என குற்றம் சாட்டிய அமைச்சர், விரைவில் மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்றும் உறுதியளித்தார்.