தோல்வி அச்சத்தில் ரணில் - வாக்கு வேட்டையில் அரச தரப்பு!
சிறிலங்கா நாடாளுமன்றில் 2023ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பின்போது வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்துவிடுமோ என்ற அச்சம் சிறிலங்கா அதிபர் தரப்புக்கு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அச்சம் காரணமாக அரச தரப்பினர் வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளார்கள் என்றும் அறியமுடிகின்றது.
அதிபரைத் தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்கவுக்கு 134 வாக்குகள் கிடைத்தன.
தோல்வி அச்சத்தில் ரணில்

ஆனால், நிதி அமைச்சர் என்ற வகையில் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்துள்ள வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது 121 வாக்குகள்தான் கிடைத்தன.
இதனால் ஒருவேளை வரவு செலவுத்திட்டம் தோல்வியடைந்துவிடுமோ என்று அதிபர் தரப்பு அஞ்சுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுக்குள்ளும் சிலர் அமைச்சுப் பதவிகள் கேட்டு ரணிலுடன் முட்டி மோதுவதால் அவர்கள் இறுதி நேரத்தில் காலைவாரி விடுவார்களோ என்ற அச்சம் ரணிலுக்கு ஏற்பட்டுள்ளது.
வாக்குவேட்டையில் அரச தரப்பு

இதனால் அரசுக்குள்ளும் அரசுக்கு வெளியேயும் வாக்கு வேட்டையில் அதிபர் தரப்பு ஈடுபட்டுள்ளது என்றும் தென்னிலங்கை வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.