வாக்குச்சீட்டை புகைப்படம் எடுக்க வேண்டாம்! சபாநாயகரின் திட்டவட்ட அறிவிப்பு
சிறிலங்காவின் புதிய அதிபரைத் தெரிவு செய்யும் வாக்கெடுப்பின் போது நாடாளுமன்ற அவையில் தமது வாக்குச்சீட்டை புகைப்படம் எடுக்க வேண்டாம் என நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான தெரிவுக்குழு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளது.
சட்ட திட்டங்களுக்கு அமைய செயற்பட்டு, தேவையான ஒத்துழைப்புகளை வழங்குமாறும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
7 ஆண்டுகளுக்கு தடை
இது இரகசியமான வாக்கெடுப்பு என்பதால், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது வாக்குச்சீட்டை புகைப்படம் எடுப்பதோ அல்லது அதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டாலோ, அவருக்கு 7 ஆண்டுகளுக்கு நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு தடையேற்படும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
1981 ஆம் ஆண்டு இலக்கம் 2 அதிபர் தேர்தல்( சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் 20 ஆவது ஷரத்திற்கு அமைய வாக்களிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுப்பது அல்லது பலவந்தப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
மீண்டும் 27 ஆம் திகதி கூடும் நாடாளுமன்றம்
அதிபரைத் தெரிவு செய்யும் வாக்கெடுப்பின் போது தமது வாக்குச்சீட்டை புகைப்படம் எடுக்குமாறு கட்சித்தலைவர் ஒருவர் ஆலோசனை வழங்கியுள்ளதால், சபாநாயகர் இந்த சட்ட ஆலோசனையை வழங்கியதாக நாடாளுமன்றத்தின் தகவல்கள் கூறுகின்றன.
இதனிடையே நாடாளுமன்றத்தை எதிர்வரும் 27 ஆம் திகதி 10 மணிக்கு மீண்டும் கூட்டுவது என நாடாளுமன்ற விவகாரங்களுக்கு தொடர்பான தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது.