அமளிதுமளியில் செங்கோலை தூக்கும் முயற்சி- சபாநாயகருக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை!
நாடாளுமன்றத்திற்கு வெளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை பாதுகாப்புப் பிரிவினர் கடுமையாக தாக்குவதாகவும், அது தொடர்பில் சபாநாயகர் சபைக்கு வந்து பதிலளிக்க வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் நேற்றைய தினம் சபையில் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளனர்.
அதனையடுத்து சபையில் கடும் வாக்குவாதமும் அமளி துமளி நிலையும் ஏற்பட்டது.
இது தொடர்பில் ஹரின் பெர்னாண்டோ நேற்று நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கையில்,
சபாநாயகர் இந்த இடத்திற்கு வராவிட்டால் அவரை வீட்டுக்காவலில் வைப்போம். நம்பிக்கையில்லா பிரேரணைக்கு திகதி குறிப்பிடாவிட்டால் போராட்டக்காரர்களை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வருவோம் என குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, சமிந்த விஜேசிறி ஆகியோர் கூச்சலிட்டவாறு சபைக்கு நடுவே இறங்கி வந்து செங்கோலை தூக்க முற்பட்டுள்ளனர்.
அதன் போது ஓடிவந்த படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோவும் உதவி படைக்கல சேவிதர்களும் செங்கோலை பாதுகாக்க முற்பட்டனர்.
இதன்போது ஏற்பட்ட இழுபறியில் படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ கீழே விழுந்த நிலையில் மீண்டும் எழுந்த அவர் செங்கோலை பாதுகாக்க முயற்சித்த நிலையில் மீண்டும் கீழே விழுந்துள்ளார்.

