அமைச்சரவை அமைச்சர்களுக்கு நிகரான அதிகாரங்கள் ரணில் வெளியிட்டுள்ள யோசனை!
நாட்டில் புதிய நிர்வாகத்தை அமைப்பதற்கு உறுதியளித்துள்ள சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சரவை அமைச்சர்களுக்கு நிகரான அதிகாரங்களை நாடாளுமன்ற குழுக்களின் தலைவர்களுக்கும் வழங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.
நேற்று மாலை கட்சித் தலைவர்கள் சிலரை சந்தித்த போதே இந்த யோசனைகளை வெளியிட்டார்.
அத்துடன் நாடாளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழுவை நியமிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
தேசிய பேரவையை உருவாக்குவதே பிரதான இலக்கு
அத்துடன் மேலும் சில இடைக்கால குழுக்களை அமைக்க வேண்டியதன் அவசியத்தையும் கண்டறிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தேசிய பேரவையை உருவாக்குவதே பிரதான இலக்கு என சுட்டிக்காட்டிய அவர், அதற்காக அனைத்து கட்சிகளின் பிரதிநிதித்துவமும் ஏனைய கட்சிகள் மற்றும் குழுக்களின் முழுமையான பிரதிநிதித்துவமும் அவசியம் எனவும் தெரிவித்தார்.
மனோகணேசன் தலைமையிலான குழு பங்கேற்பு
நாடாளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள்
காங்கிரஸ், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவை,
ரவூப் ஹக்கீம் தலைமையிலான சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ், அனுர பிரியதர்ஷன
யாப்பா தலைமையிலான நாடாளுமன்றக் குழு, சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ்
மக்கள் தேசிய கூட்டணி ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில்
கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.