இலக்கத்தகடு அற்ற மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆயுததாரிகள் யார்? கேள்விகளால் ஆளும் தரப்பை துளைத்தெடுத்த சஜித்!
நாட்டில் தற்போது நிதி அமைச்சர் இல்லை. புது நிதி அமைச்சராக அலி சப்ரி பதவி ஏற்றார் பின்னர் அவரே விலகிச் சென்றார். இதற்கான காரணம் என்ன? இன்று நாட்டில் நிதி அமைச்சர் யார் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
நேற்றைய தினம் இடம்பெற்ற அமைதியான போராட்டத்தில் இலக்கத்தகடு அற்ற மோட்டார் சைக்கிள்களில் ஆயுதம் தாங்கிய படையினர் வந்து சென்றிருந்தனர். யார் அவர்கள்? எதற்காக இப்படி வந்தார்கள்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டில் ஒரு சர்வாதிகாரத்தை கொண்டுவருவதற்கான ஒரு கொடூரமான முயற்சி இது என்றும் நீங்கள் தன்னிச்சையாக நடந்து கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.
இதேவேளை டொலர் நெருக்கடியை தீர்க்கவும் நாட்டை மீட்டெடுக்கவும் பண்டோரா ஆவணங்களில் பெயரிடப்பட்டவர்களின் பின்னல் சென்று பணத்தை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் நாட்டில் ஏன் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது? எந்த காரணத்திற்காக நாட்டில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது? சமூக வலைத்தளங்கள் நாட்டில் முடக்கப்பட்டமைக்கான காரணம் என்ன எனவும் சரமாரியாக கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளார்.